9TH - TAMIL - UNIT -8 - SPECIAL GUIDE - PDF

 

ஒன்பதாம் வகுப்பு - தமிழ் பாடத்திற்கான வழிகாட்டி

 சிறப்பு வழிகாட்டி

இயல் – 8                                                            என் தலை கடனே            

ஒன்பதாம் வகுப்புதமிழ்

அ) பலவுள் தெரிக.

1. சரியான விடையைத் தேர்ந்தெடுக்க.

கூற்று - பெரியார் உயிர் எழுத்துகளில் ’ஐ’ என்பதனை ’அய்’ எனவும், ’ஒள’ என்பதனை ’அவ்’ எனவும் சீரமைத்தார்.

 காரணம் – சில எழுத்துகளைக் குறைப்பதன் வாயிலாகத் தமிழ் எழுத்துகளின் எண்ணிக்கையைக் குறைக்கலாம் என்று எண்ணினார்.

அ) கூற்று சரி, காரணம் தவறு                   ஆ) கூற்று, காரணம் இரண்டும் சரி

இ) கூற்று, காரணம் இரண்டும் தவறு        ஈ) கூற்று தவறு, காரணம் சரி

2. காலத்தினால் செய்த நன்றி சிறிதெனினும் ஞாலத்தின் மாணப் பெரிது - இக்குறளின் ஈற்றுச் சீரின் வாய்பாடு யாது?

அ) நாள்             ஆ) மலர்            இ)காசு              ஈ)பிறப்பு

 3. முண்டி மோதும் துணிவே இன்பம் – இவ்வடியில் இன்பமாக உருவகிக்கப்படுவது

அ) மகிழ்ச்சி         ஆ) வியப்பு         இ) துணிவு        ஈ) மருட்சி

 4. விடைக்கேற்ற வினாவைத் தேர்க .

விடை – பானையின் வெற்றிடமே நமக்குப் பயன்படுகிறது.

அ) பானையின் எப்பகுதி நமக்குப் பயன்படுகிறது?

ஆ) பானை எப்படி நமக்குப் பயன்படுகிறது?

இ) பானை எதனால் நமக்குப் பயன்படுகிறது?

ஈ) பானை எங்கு நமக்குப் பயன்படுகிறது?

5. ‘ஞானம்’ என்பதன் பொருள் யாது?

அ) தானம்          ஆ) தெளிவு         இ) சினம்           ஈ) அறிவு

குறுவினா

1. ‘பகுத்தறிவு’ என்றால் என்ன?

          எச்செயலையும் அறிவியல் கண்ணோட்த்துடன் அணுகி. அறிவின் வழியே சிந்தித்து முடிவு காண்பது.

2. தாவோ தே ஜிங் ‘இன்னொரு பக்கம்’ என்று எதைக் குறிப்பிடுகின்றது?

          “ வெற்றிடத்தை” குறிப்பிடுகிறார்.

3. கமுகுமரம் எதைத் தேடியது?

          கதிரவனின் ஒளியாகிய உயிர்ப்பைத் தேடியது

 4. யசோதர காவியத்தின் பாட்டுடைத் தலைவன் யார்?

          அவந்தி நாட்டு மன்னன் “ யசோதரன் “

5. அசை எத்தனை வகைப்படும்? அவை யாவை?

          இரண்டு வகைப்படும்.     1. நேர் அசை       2. நிரையசை

சிறுவினா

1. சிக்கனம் குறித்த பெரியாரின் கருத்துகளை இன்றைய நடைமுறையோடு தொடர்புபடுத்தி எழுதுக.

·         பெரியார் சிக்கனத்தோடு வாழ்ந்தார்.

·         வீண் செலவு ஏற்படுவதால் சடங்கு, விழாக்களைத் தவிர்க்க வேண்டும் என்றார்.

·         திருமணத்தை பகட்டாக நடத்தாமல் எளிமையாக நடத்த வேண்டும்.

·         தேவையற்ற பொருட்களை வாங்குவதை விட தேவையுள்ள பொருட்களை வாங்க வேண்டும்.

·         சேமிப்பு பழக்கம் இருக்க வேண்டும்.

·         கண்மூடித்தனமாக செலவு செய்வதை தவிர்க்க வேண்டும்.

2. நாம் கடைப்பிடிக்க வேண்டிய வாழ்க்கை நெறிகளாக யசோதர காவியம் குறிப்பிடுவன யாவை?

·         செய்யும் செயல் பயன் தருவதாக அமைய வேண்டும்.

·         தீய பண்புகள் நீங்க சினத்தை நீக்க வேண்டும்.

·         மெய்யறிவு நூல்களை ஆராய்தல் வேண்டும்

·         நன்னெறிகளைக் காக்க வேண்டும்.

 3. பிறமொழி இலக்கியங்களைத் தழுவி எழுதப்பட்ட தமிழ் இலக்கியங்களைக் குறிப்பிடுக.

·         வடமொழி இதிகாசங்களை தழுவி “ பாரதம், கம்பராமாயணம் “ எழுதப்பட்டன.

·         ஆங்கில இலக்கியத்தை தழுவி, “ இரட்சணிய யாத்திரிகம், ஆசிய ஜோதி “ எழுதப்பட்டன.

4. யசோதர காவியம் வெளிப்படுத்தும் வாழ்க்கை நெறிகளைத் திருக்குறளுடன் ஒப்பிட்டு எழுதுக.

யசோதர காவியம்

திருக்குறள்

1. ஆக்குவது ஏதெனில் அறத்தை ஆக்குக.

பயன் தரும் செயலை செய்ய வேண்டும்

மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்தறன்

ஆகுல நீரப் பிற

மனித வாழ்விற்கு அறமே ஏற்புடையது

2. போக்குவது ஏதெனில் வெகுளி போக்குக.

 சினத்தை முதலில் நீக்க வேண்டும்.

தன்னைத்தான் காக்கின் சினங்காக்க காவாக்கால் தன்னையே கொல்லுஞ் சினம்

நற்பண்புகளை காக்க வேண்டுமெனில் சினம் வராமல் தன்னைக் காக்க வேண்டும்.

நெடுவினா

1. மொழியிலும் இலக்கியத்திலும் பெரியார் மேற்கொண்ட சீரமைப்புகளை விளக்குக.

மொழி

·         மிகப் பழமையான தமிழ்மொழியில் அறிவியல் வளர்ச்சிக்கேற்ற நூல்கள் படைக்கப் பட வேண்டும்.

·         ஒரு மொழியின் தேவை அதன் பயன்பாட்டு முறையைக் கொண்டே அமைகிறது.

·         மொழி எளிதில் கற்கக் கூடியதாக அமைய வேண்டும்.

·         அரசியல் ,சமூகம், பொருளாதாரக் கருத்துகளை ஊன்றி படிப்பவர் சுயமரியாதை உணர்ச்சி பெறுவர்.

இலக்கியம்

·         மொழியின் பெருமையும், எழுத்துகளின் மேன்மையும் அவை எளிதில் கற்றக்கொள்ளக் கூடியவனாக இருப்பதை பொறுத்து அமைகிறது.

·         மொழி என்னும் கருவி காலத்திற்கு ஏற்ப மாற்றப்பட வேண்டும்.

·         பெரியார் உயிர் எழுத்துகளில் ’ஐ’ என்பதனை ’அய்’ எனவும், ’ஒள’ என்பதனை ’அவ்’ எனவும் சீரமைத்தார்.

2. மொழியின் விரல் பிடித்து நடக்கப் பழகிக்கொண்டிருக்கும் தன்மகனுக்கு நா.முத்துக்குமார் எழுதியுள்ள கடிதச் செய்திகளைத் தொகுத்து எழுதுக.

.முத்துக்குமார் அவர்கள் தன் மகனுக்கு எழுதிய கடிதத்தின் செய்திகளைக் காண்போம்.

·         உலகம் இப்படித்தான் அழ வேண்டும். இப்படி தான் சிரிக்க வேண்டும்.

·         வாழ்க்கை முழுக்க நீ வெவ்வேறு வடித்தில் நடிக்க வேண்டும்.

·         கல்வியில் தேர்ச்சி கொள். இதேநேரம் அனுபவங்களிடம் இருந்து அதிகம் கற்றுக் கொள்.

·         இறக்கும் வரை இங்கு வாழ சூத்திரத்தைக் கற்றுக் கொள்.

·         மாநகரத்தில் வாழும் நீ கொடிய பல தேள் பல வடிவத்தில் இருக்கும், உனக்கான காற்றை நீயே உருவாக்கிக் கொள்.

·         கிடைத்த வேலையை விட, பிடித்த வேலையைச் செய்.

·         யாராவது கேட்டால் இல்ல எனினும் கடன் வாங்கியாவது உதவி செய்.

·         உலகில் மேலானது நட்பு மட்டுமே. நண்பர்களைச் சேர்த்துக் கொள்.

·         உன் வாழ்க்கை நேராகும்

 3. வாழ்க்கைப் போரில் வெற்றிபெறுவதற்கான வழிகளைக் கமுகுமரம் வாயிலாக ஆசிரியர் எவ்வாறு உணர்த்துகிறார்?

·         கமுகு மரம், தான் தோன்றிய இடத்தில் இருந்த பெருமரத்தின் நிழல் என்னும் இருளைத் துளைத்து நின்றது.

·         கமுகு மரம் விண்ணிலிருந்து வரும் கதிரவன் உயிர்ப்பைத் (அமுதை) தேடியது.

·         கமுகு மரம் பெருமரத்தின் நிழலை வெறுத்து, உச்சி கிளையை மேல் உயர்த்தி நின்றது.

·         அமுதத்தை நம்பி, ஒளியை வேண்டிக் கமுகு மரம் பெருமரத்துடன் போட்டி போடக் காரணம் ஆகும்.

·         இதுவே வாழ்க்கைப் போர்

·         கமுகு மரம் பெருமரத்துடன் முட்டி மோதி துணிச்சல், முயற்சி, நம்பிக்கைக் கொண்டு தன்முனைப்போடு கூடிய போட்டியில் போராடி வென்றது.

·         பெரு மரத்தை விஞ்சி வளர்ச்சி பெற்றி நடை போடுகிறது.

·         அதுபோலவே வாழ்க்கைப் போரில் செயல்பட்டால் வெற்றி பெறலாம் என்கின்ற வழியைக் கழுகமரம் வாயிலாக ஆசிரியர் உணர்த்துகிறார்.

மொழியை ஆள்வோம்

அ. மொழி பெயர்க்க :-

Once Buddha and his disciples were thirsty. They reached a lake. But it was muddy because somebody just finished washing their clothes. Buddha asked his disciples to take a little rest there by the tree. After half an hour the disciples noticed that the water was very clear. Buddha said to them,” You let the water and the mud be settled down on its own. Your mind is also like that. When it is disturbed, just let it be. Give a little time. It will settle down on its own. We can judge and take best decisions of our life when we stay calm.”

ஒருமுறை புத்தரும், அவருடைய சீடர்களும் மிகுந்த தாகத்துடன் இருந்தனர். ஓர் ஏரியை அடைந்தனர். யாரோ ஒருவர் தன் துணிகளைத் துவைத்திருந்தபடியால், ஏரி நீர் கலங்கி, சேருடன் காணப்பட்டது. புத்தர் தன் சீடர்களை நோக்கி சற்று நேரம் இம்மரத்தடியில் அமைதியாக இளைப்பாறுவோம் என்றார். அரைமணி நேரம் கழித்து அவருடைய சீடர்கள் ஏரியை உற்றுப் பார்த்தனர்.

அழுக்குகள் ஒதுங்கிவிட்டன. சேறும் நீரின் அடி ஆழத்திற்குச் சென்று படிந்து விட்டது. தண்ணீர் மிகவும் தெளிவாகி விட்டது. உங்கள் மனமும் இதைப்போலத்தான், ஏரியை அழுக்கும், சேறும் கலக்கியது போல உங்கள் மனத்தைக் கலக்கும் செயல்கள் நடைபெற்றால் சற்று நேரம் அமைதியாக இருங்கள். அவை கரைந்து, மறைந்து, அழிந்து போய்விடும். அதுவரை அமைதியாக இருந்துவிட்டு பின் உங்கள் முடிவுகளைச் சிந்தித்து எடுங்கள். அதுவே சிறந்த நேர்மையான வாழ்வுக்கு வழியாகும்.

ஆ) சொற்றொடர்களை அடைப்புக் குறிக்குள் உள்ளவாறு மாற்றுக.

1) மறுநாள் வீட்டுக்கு வருவதாக முரளி கூறினார். (நேர்க்கூற்றாக மாற்றுக)

“ நான் நாளை வருவேன்” என்று முரளி கூறினார்.

2) ”தென்னாட்டுப் பெர்னாட்ஷா என்று அறிஞர் அண்ணாவைப் புகழ்கிறோம்” என்று ஆசிரியர் கூறினார். (அயற்கூற்றாக மாற்றுக)

தென்னாட்டு பெர்னாட்ஷா என்று அண்ணா புகழப்படுவதாக ஆசிரியர் கூறினார்.

3) மார்னிங் நாஷ்டாவுக்கு இரண்டு தோசைகள் ஹோட்டலில் சாப்பிட்டான். (பிறமொழிச் சொற்களைத் தமிழாக்குக)

காலை சிற்றுண்டிக்கு இரண்டு தோசைகளை உணவகத்தில் உண்டான்

4) அலறும் மயிலும் கூவும் ஆந்தையும் அகவும் சேவலும் போன்ற இயற்கையின் அழகான ஒலிகளை நாம் நேசிக்கவேண்டும். (ஒலிமரபுப் பிழைகளைத் திருத்துக)

அகவும் மயிலும், அலறும் ஆந்தையும், கூவும் சேவலும், போன்ற இயற்கையின் ஒலிகளை நாம் நேசிக்க வேண்டும்.

5) கோழிக்குட்டிகளைப் பிடிக்கப் பூனைக் குஞ்சுகள் ஓடின. (பெயர்மரபுப் பிழைகளைத் திருத்துக)

கோழிக்குஞ்சுகளைப் பிடிக்க பூனைக்குட்டிகள் ஓடின.

இ) அஞ்சலட்டையில் எழுதுக. வார இதழ் ஒன்றில் படித்த கவிதையை/ கதையைப் பாராட்டி அந்த இதழாசிரியருக்கு அஞ்சலட்டையில் கடிதம் எழுதுக.

4,ஔவை நகர்,

கடலூர்-1.

30-09-2021.

மதிப்புமிகு இதழாசிரியருக்கு,

      வணக்கம்.தங்களது ”தமிழ்விதை” என்ற இதழில் வெளியாகக் கூடிய கவிதைகளை விரும்பிப் படிக்கும் வாசகர் நான்.24-09-2021 அன்று வெளியான இதழில் திரைப்பட இயக்குநர் இரா.பார்த்திபன் அவர்களின் “கருணை” என்ற தலைப்பில் வெளிவந்த கவிதையில்,

                                    “கருவுற்றிருந்தால்

                                     ஒரு குழந்தைக்கு மட்டுமே தாயாகியிருப்பாய்:

                                     கருணையுற்றதால்,

                                     உலகிற்கே தாயானாய்”

     என்ற அன்னை தெரேசா பற்றிய கவிதையைப் படிக்க நேர்ந்தது.படித்ததும் மிகவும் நெகிழ்ந்து போனேன்.கருணையையும்,தாய்மையையும்  ஒன்றிணைத்து மேன்மைப் படுத்தியிருப்பது பாராட்டத்தக்க ஒன்று.இரா.பார்த்திபன் அவர்களுக்கு எனது மனமார்ந்த பாராட்டுகள்.

இப்படிக்கு,

தங்கள் அன்பு வாசகர்,

ச.யாழினி.

உறைமேல் முகவரி:

   ஆசிரியர், தமிழ்விதை இதழ்,

   12,தமிழ்ச்சோலை நகர்,

   சேலம்-2.

ஈ) நயம் பாராட்டுக.

திங்கள்முடி சூடுமலை

தென்றல்விளை யாடுமலை

தங்குபுயல் சூழுமலை

தமிழ்முனிவன் வாழுமலை

அங்கயற்கண் அம்மைதிரு

அருள்சுரந்து பொழிவதெனப்

பொங்கருவி தூங்குமலை

பொதியமலை என்மலையே

- குமரகுருபரர்

திரண்ட கருத்து:

நிலவைத் தன் மணிமுடியாகச் சூடிய மலை. எப்போதும் தென்றல் தவழ்ந்து விளையாடும் மலை. அகலாது தன்னகத்தே தங்குகின்ற முகில் கூட்டங்கள் சூழ்ந்த மலை. தமிழ் முனிவன் அகத்தியன் வாழ்ந்த மலை.

அங்கயற்கண்ணியாம் மீனாட்சி கண் திறந்து அருள் சுரந்து பொழிவதைப் போல் பொங்குகின்ற அருவிகள் விழுகின்ற மலை. பொதிய மலையாம் என் மலையே.

மையக்கருத்து:

பொதிகையின் அழகைக் குமரகுருபரர் மையமாக வைத்து இப்பாடலை இயற்றியுள்ளார்.

 மோனை நயம்:

செய்யுளில் அடியிலோ, சீரிலோ முதல் எழுத்து ஒன்றி வரத் தொடுப்பது மோனை நயம் எனப்படும்.

சான்று:

ங்கு முகில் – மிழ் முனி

ங்கயற்கண்ணி – ருள் சுரந்து

எதுகை நயம்:

செய்யுளில் அடியிலோ சீரிலோ இரண்டாவது எழுத்து ஒன்றி வரத் தொடுப்பது எதுகை ஆகும்.

சான்று:

திங்கள் – தங்கு

ங்கயற் – பொங்கருவி

அணி நயம்:

பொதிகை மலையில் விழும் அருவி “அங்கயற்கண் அம்மை திரு அருள் சுரந்து பொழிவதென்” என்னும் அடியில் உவமையணி அமைந்துள்ளது.

சந்தநயம்:

அறுசீர்ச் கழி நெடிலடி ஆசிரிய விருத்தம் பெற்று செப்பலோசையுடன் இனிமையாக அமைந்துள்ளது.

இயைபுத் தொடை:

செய்யுளில் அடிதோறும் இறுதி எழுத்தோ, சொல்லோ இயைந்து வரத் தொடுப்பது இயைபுத் தொடை.

சான்று:

சூடு மலை, யாடு மலை, வாழு மலை

 

மொழியோடு விளையாடு

அ) பொருத்தமான வாய்பாடுகளை வட்டமிடுக.

 பகலவன்          - காசு/கருவிளம்/கூவிளங்கனி  - கருவிளம்

மலர்ச்சி             - கூவிளம்/ புளிமா/ கருவிளம் -  புளிமா

 தாவோவியம்     - தேமாங்கனி/ தேமா/ பிறப்பு -  தேமாங்கனி

வெற்றிடம்          - நாள்/ கூவிளம் / புளிமா  - கூவிளம்

பூங்குட்டி            - கருவிளங்கனி / மலர்/ தேமாங்காய் – தேமாங்காய்

 

ஆ) அகராதியில் காண்க.

வயம் – வலிமை

ஓதம் - ஈரம்

பொலிதல் – செழித்தல்

துலக்கம் –  விளக்கம்

நடலை - இன்பம்

இ) வினைத்தொகைகளைப் பொருத்தி எழுதுக.

(வளர்தமிழ், விளைநிலம், குளிர்காற்று, விரிவானம், உயர்மதில், நீள்வீதி, கரைவிளக்கு, மூடுபனி, வளர்பிறை, தளிர்பூ)

1. வளர்பிறை நிலவுடன் விரிவானம் அழகாகக் காட்சியளிக்கிறது.

2 தளிர்ங்கொடிகளும் விளைநிலங்களும் மனத்தைக் கொள்ளையடிக்கின்றன.

3. நீள்வீதிகள் அனைத்தும் மூடுபனியில் முழுகிக்கிடக்கின்றன.

4. மெல்ல வீசும் குளிர்காற்றும் வளர்தமிழ் புகழ்பாடுகின்றது.

5. தொலைவில் கலங்கலங்கரை விளக்கத்தின் ஒளி உயர்மதில்சுவரை ஒளிரச் செய்கிறது.

ஈ) பொருத்துக



விடை :

நேர்/நேர்/நிரை – தேமாங்கனி

நிரை/நிரை/நேர் – கருவிளங்காய்

நேர்/நிரை – கூவிளம்

நிரை/நிரை – கருவிளம்

நேர்/நேர்/நேர் – தேமாங்காய்

உ) காட்சியைக் கண்டு கவினுற எழுதுக.

ஏடெடுத்தேன் கவி ஒன்று எழுத

என்னை எழுது என்று சொன்னது இந்தக் காட்சி

அர்த்தமுள்ளக் காட்சி

ஆழ்ந்து சிந்திக்க வைக்கும் காட்சி

சமூக விளைவைக் காட்டும் காட்சி

ஊ) கலைச்சொல் அறிவோம்

எழுத்துச் சீர்திருத்தம்- Reforming the letters

எழுத்துரு - Font

மெய்யியல் (தத்துவம்) - Philosophy

அசை - Syllable

இயைபுத் தொடை - Rhyme

நிற்க அதற்குத் தக

ஒரு நல்ல தோழியாக / தோழராக நண்பர்களுக்குச் செய்ய வேண்டியது..

அ) எழுதுபொருள்களை நண்பர்களுக்குக் கொடுத்து உதவுவது

ஆ) விடுப்பு எடுத்த நண்பர்களுக்கு ஏடுகள் கொடுத்து உதவுதல், வகுப்பில் நடந்தவற்றைப் பகிர்தல்.

இ) மனது புண்படாமல் நடத்தல்.

ஈ) கடினப் பாடங்களை புரிய வைத்தல்

உ) உகந்த நேரத்தில் உதவுதல்


சிறப்பு வழிகாட்டி ஆக்கம் :

வெ.ராமகிருஷ்ணன், தமிழாசிரியர்,

அரசு உயர்நிலைப் பள்ளி, கோரணம்பட்டி,

சேலம்.

8667426866,8695617154


15 விநாடிகள் காத்திருக்கவும்

நன்றி 

நீங்கள் 15 விநாடிகள் காத்திருக்கவும் .

காத்திருப்புக்கு நன்றி


வலைப்பக்கம் :

WWW.TAMILVITHAI.COM                               WWW.KALVIVITHAIGAL.COM



 

 

 

 

 



YOUTUBE :

https://youtube.com/user/000ramakrishnan

 

Post a Comment

THANKS FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post