10TH-TAMIL-NEW EDTION BOOK -25-26-UNIT-7-TOPPERS - BIG QUESTION

 

பத்தாம் வகுப்பு

தமிழ்

இயல் – 7

மீத்திற மாணவர்களுக்கான நெடுவினாக்கள்

நெடுவினாக்கள்

1 கருணையனின் தாய் மறைவுக்கு,வீரமாமுனிவர் தம் பூக்கள் போன்ற உவமைகளாலும் உருவக  மலர்களாலும் நிகழ்த்திய கவிதாஞ்சலியை விவரிக்க.

குறிப்புச்சட்டம்

முன்னுரை

மலர்படுக்கை

கருணையன் துயரம்

தாயை இழந்த வலி

கருணையன் அறியாதவை

பறவைகள், வண்டுகளின் அழுகை

முடிவுரை

முன்னுரை :

        தாயின் அன்பை எழுத உலகின் மொழிகள் போதாது; தாயையிழந்து தனித்து இருக்கும் துயரம் பெரிது. வீரமாமுனிவர், கருணையன் தன் தாய் எலிசபெத் மறைவிற்கு தம் பூக்கள் போன்ற உவமைகளாலும், உருவக மலர்களாலும் நிகழ்த்திய கவிதாஞ்சலியை இங்கு காண்போம்.

மலர்படுக்கை :

·         கருணையன் தன் கைகளைக் குவித்து, பூமித்தாயிடம் தன்னை அன்னையின் உடலை அன்போடு காக்க வேண்டும் எனக் கூறினான்.

·         தன் அன்னையின் உடலை, மண் இட்டு மூடி அடக்கம் செய்து, அதன் மேல் மலர்களையும், தன் கண்ணீரையும் ஒரு சேரப் பொழிந்தான்.

கருணையன் துயரம் :

·         தாய் கூறிய சொற்களை மழைநீராக உட்கொண்டு, தாயின் மார்பில் ஒரு மணிமாலையாக வாழ்ந்தேன்.

·         நெற்பயிர் மழைநீர் இல்லாமல் வாடி காய்ந்து விட்டத்தைப் போல நானும் தாயை இழந்து வாடுகிறேன்.

தாயை இழந்த வலி :

·         மரக்கிளையிலிருந்து பறிக்கப்பட்ட மலர் போல என் மனம் வாடுகிறது.

·         அம்பினால் துளைக்கப்பட்டு உண்டான புண்ணின் வலியால் தவிப்பது போன்று வாடுகிறேன்.

·         துணையைப் பிரிந்த பறவையைப் போல வாடுகிறேன்.

·         தனித்து விடப்பட்ட காட்டில் வழி தெரியாமல் வாடுகிறேன்.

கருணையன் அறியாதவை:

·         உயிர் பிழைக்கும் வழி அறியேன்

·         உடலின் தன்மையை அறியேன்

·         உடலுக்கு வேண்டிய உணவைத் தேடும் வழி அறியேன்

·         காட்டில் செல்வதற்கான வழிகளை அறியேன்.

பறவைகள், வண்டுகளின் அழுகை :

·         கருணையன் புலம்பியதைக் கண்டு…

·         பல்வேறு இசைகளை இயக்கியது போன்று…

·         தேன்மலர்கள் பூத்த மரங்கள் தோறும்

·         மணம் வீசும் மலர்களும் மலர்ந்த சுனை தோறும்

·         பறவைகளும், வண்டுகளும் அக்காட்டினிலே அழுவது போன்று கூச்சலிட்டன,

முடிவுரை :

        துயரத்தைத் தாங்கிக் கொள்ளும் மனங்கள் மனிதத்தின் முகவரிகள். சாதாரண உயிரினங்களுக்கும் துயரத்தைப் பகிர்ந்து கொள்ளும் மனிதத்தை, வீரமாமுனிவர், கருணையன் தன் தாய் எலிசபெத் மறைவிற்கு தம் பூக்கள் போன்ற உவமைகளாலும், உருவக மலர்களாலும் நிகழ்த்திய கவிதாஞ்சலியை இங்கு காண்டோம்.

2. கிடைப்பதற்கரிய திருமந்திரம் கிடைத்தவுடன் இராமானுசர் செய்த நிகழ்வுகளைத் தொகுத்து எழுதுக.

குறிப்புச்சட்டம்

முன்னுரை

இராமனுசர்

திருமந்திரம்

திருகோட்டியூர் திருக்கோவில்

திருமந்திரம் பகிர்தல்

பூரணரிடம் விளக்கம்

முடிவுரை

முன்னுரை :

        நாளுக்கு ஒரு முறை மலர்வது சண்பகம். ஆண்டுக்கு ஒரு முறை மலர்வது பிரம்ம கமலம். பன்னிரண்டு ஆண்டுக்கு ஒரு முறை மலர்வது குறிஞ்சி. தலைமுறைக்கு ஒரு முறை மட்டுமே மலர்வது மூங்கில். அதைப்போல ஞானிகள் தலைமுறைக்கு ஒரு முறை தான் பிறப்பார்கள். அந்த ஞானிகளும் தமக்கு கிடைத்ததை மற்றவர்களுக்கு கொடுத்து அவர்களும் இன்பமுற வாழ நினைப்பவர்கள் ஞானிகள். அப்படிப்பட்ட ஒருவரை இக்கட்டுரையில் நாம் காணலாம்.

 இராமானுசர் :

        இராமானுசர் (இராமானுஜர், 1017-1137) இந்து தத்துவப் பிரிவுகளில் ஒன்றான வேதாந்தத்தின் விளக்கங்களில் ஒன்றான விசிஷ்டாத் வைதத்தின் முன்னோடியாக விளங்கியவர். இவருக்கு கூரேசர், முதலியாண்டான் என்ற இருவரும் தண்டும் கொடியுமாக இருப்பவர்கள்.

திருமந்திரம்

        பூரணரால், பிறவிப்பிணி நீக்கும் அருமருந்தான திருமந்திரத்தை கூறுவதற்கு அவர் இல்லத்துக்கு அவரை மட்டும் தண்டும் கொடியுமாக தனியே வர சொல்லுகிறார். இராமானுசர் தன் தண்டும் கொடியுமாக உள்ள கூரேசர், முதலியாண்டாரை அழைத்துக் கொண்டு சென்று திருமந்திரத்தை பெறுகிறார்.

          திருமந்திரத்தை மூவர் தவிர வேறு யாருக்கும் தெரியக்கூடாது. மீறினால் ஆச்சாரிய நியமத்தை மீறிய பாவிகளாக மாறக் கூடும் என்ற கட்டளையுடன் பூரணரிடமிருந்து திருமந்திரத்தைப் பெறுகிறார்கள்.

திருகோட்டியூர் திருக்கோவில் :

        பொதுமக்கள் அனைவரும் வேகமாக விரைந்து கோவிலைச் சென்றடைகிறார்கள். ஆங்கே, இராமானுசர் மக்களுக்கு பிறவிப்பிணி நீக்கும் அருமருந்தான திருமந்திரத்தை கூறுவதற்கு ஆயத்தமானார். கோவில் மதில் சுவரின் மேல் நின்றுக் கொண்டார்.

திருமந்திரம் பகிர்தல் :

        தமக்கு கிடைத்த திருமந்திரமானது தங்களின் பிறவிப்பிணியை போக்கக் கூடியது. பெரும்பான்மையான மக்கள் தமக்கு கிடைக்கும் அரியப் பொருட்கள், தகவல்கள், செய்திகளை பிறருக்கு பகிர மாட்டார்கள். ஆனால் இராமானுசர் தமக்கு கிடைத்த திருமந்திரத்தை அனைவருக்கும் கூறி அவர்களின் பிறவிப்பிணியைப் போக்கினார். எவரும் செய்ய இயலாத காரியத்தை செய்து மனித இன்னுயிர்களை காத்தார்.

பூரணரிடம் விளக்கம் :

          இராமானுசர், பூரணரிடம்,  நாங்கள் செய்த இச்செயலுக்கு  நரகமே கிடைக்கும். இருப்பினும் தாங்கள் கூறிய திருமந்திரம் எனக்கு மட்டுமே பயன் கிட்டும். அருமந்திரத்தை அனைவருக்கும் கூறினால், உழன்று பேதை வாழ்வு வாழ்ந்து வரும் பல்லாயிரக்கணக்கான மக்கள் தங்களின் பிறவிப்பிணியை நீங்கி பேறு பெறுவார்கள். இதனால் நான் மட்டுமே தண்டனை கிடைக்கப் பெற்று நரகத்தைச் சேர்வேன். என் மக்கள் அனைவருக்கும் நலம் கிட்டும் எல்லோரும் நலமுடன் வாழ்வார்கள்.

முடிவுரை :

        இராமானுசர் சுயநலம் பாராது. எல்லோரும் இன்புறிருக்க அருமந்திரத்தை மக்களுக்கு அளித்த குணம் போற்றத்தக்கது. தன்னிடம் இருப்பதை மற்றவர்களுக்கு கொடுத்து அதில் இன்பம் காண்பதே இன்பமாகும். இவரைப் போன்று உலக மக்கள் அனைவரும் செயல்பட்டால், உலகமே இன்பமாகும்.

3. பள்ளித்திடலில் கிடைத்த பணப்பையை உரியவரிடம் ஒப்படைத்ததையும் அதற்குப் பாராட்டுப் பெற்றதையும் பற்றி வெளியூரில் இருக்கும் உறவினர் ஒருவருக்குக் கடிதம் எழுதுக. (வினா எண் : 39   - 5 மதிப்பெண் – கடித வினா )

சேலம்

03-03-2024

அன்புள்ள மாமாவுக்கு,

          நான் நலம். நீங்கள் நலமா? என அறிய ஆவல். சென்ற வாரம் எங்கள் பள்ளித் திடலில் பை ஒன்று கிடந்தது. அதனை திறந்த போது அதில் நிறைய பணம் இருந்தது. உடனடியாக நான் தலைமை ஆசிரியரிடம் விபரம் கூறி ஒப்படைத்தேன். தலைமை ஆசிரியரும் காவல் துறை அலுவலரைத் தொடர்புக் கொண்டு விபரங்களைக் கூறினார். மறுநாள் காலை இறைவணக்கக் கூட்டத்தில் தலைமை ஆசிரியர் மற்றும் காவல் துறை உயர் அதிகாரி இருவரும் என்னைப் பாராட்டி ஒரு நற்சான்றிதழையும் வழங்கினார்கள். மேலும் இது போன்ற நற்காரியங்களை அனைத்து மாணவர்களும் செய்ய வேண்டும் எனக் கூறினர். காவல் துறை அலுவலர் ஐயா அவர்கள், மாவட்ட ஆட்சியரிடம் கூறி விரைவில் எனக்கு அரசு சார்பில் பாராட்டு நிகழ்வு நடத்துவதாகக் கூறியது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. நேர்மைக்குக் கிடைத்த மிகப் பெரிய பரிசாக இதை கருதுகிறேன். வீட்டில் அனைவரிடமும் இதை கூறவும்.

                                                          நன்றி,வணக்கம்.

இப்படிக்கு,

தங்கள் உண்மையுள்ள,

அ அ அ அ அ அ அ .

 

 

உறைமேல் முகவரி;

பெறுதல்

          திரு.இரா.இளங்கோ,

          100,பாரதி தெரு,

          நாமக்கல்.

4. குறிப்புகளைக் கொண்டு ஒரு பக்க அளவில் நாடகம் எழுதுக.

        மாணவன்கொக்கைப் போல,கோழியைப் போலஉப்பைப் போலஇருக்க வேண்டும்கொக்கு காத்திருந்து கிடைக்கும் வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ளும்குப்பையைக் கிளறினாலும் தனது உணவை மட்டுமே எடுத்துக்கொள்ளும் கோழிகண்ணுக்குத் தெரியாவிட்டாலும் உப்பின் சுவையை உணரமுடியும்ஆசிரியர் விளக்கம்மாணவன் மகிழ்ச்சி

இடம் : பள்ளி, வகுப்பறை

பங்கேற்பாளர்கள் : தமிழாசிரியர், இளவரசி, தேஜாஸ்ரீ, கவிபிரியா,

இளவரசி : தேஜாஸ்ரீ, கவிபிரியா நமது தமிழ் ஆசிரியர் அன்றைய வகுப்பில் மாணவர்கள் எப்படி இருக்க வேண்டும்? எனக் கூற வந்தார்.  அதற்குள் மணி      அடித்துவிட்டது. இன்று நாம் அவரிடம் முதலில்   கேட்டிடுவோம்.

தேஜாஸ்ரீ     :           ஆம், வந்தவுடன் கேட்கலாம்.

மாணவிகள்  :        வணக்கம். ஐயா,

தமிழாசிரியர் :         வணக்கம் மாணவிகளே, எல்லோரும் உணவு உண்டீர்களா?

மாணவிகள் :                   உண்டோம் ஐயா.

தமிழாசிரியர் :         என்ன செய்தி? மூவரும் ஒன்றாக வந்துள்ளீர்கள்? நேற்றைய

இலக்கணத்தில் ஏதேனும் சந்தேகமா?

இளவரசி    :         ஆம், ஐயா… சந்தேகம் தான் ஆனால் நீங்கள் நடத்திய

                             இலக்கணத்தில் இல்லை ஐயா.

தமிழாசிரியர் :         வேறு எதில் சந்தேகம் உங்களுக்கு….

கவிபிரியா  :           நேற்று பாடவேளையின் இறுதியில் நீங்கள் கூறியது தான்

                              எங்களுக்குப் புரியவில்லை.

தமிழாசிரியர் :         என்னக் கூறினேன்?

இளவரசி :              ஐயா! நேற்றைய வகுப்பில் மாணவர்கள் எவ்வாறு இருக்க  வேண்டும் என்பதனை கூற வந்தீர்கள். அதற்குள் மணி அடித்துவிட்டது. இப்போது கூறுங்கள்.

தேஜாஸ்ரீ, கவிபிரியா :        ஆமாம். ஐயா.

தமிழாசிரியர் :         ஆம். மாணவர்கள் எவ்வாறு இருக்க வேண்டும் என்பதனை

மூன்று உதாரணங்களுடன் கூறுகிறேன். கேளுங்கள்

மாணவிகள் :          கூறுங்கள் ஐயா.

தமிழாசிரியர் :         1. மாணவர்கள் கொக்கைப் போல இருக்க வேண்டும்.

2. கோழியைப் போல இருக்க வேண்டும்.

3. உப்பைப் போல இருக்க வேண்டும்.

கவிபிரியா   :        ஐயா, எங்களுக்கு புரிய வில்லை. கொக்கைப் போல,

                             கோழியைப் போல . உப்பைப் போல ஏன் இருக்க வேண்டும்?

தமிழாசிரியர் :         ஒவ்வொன்றாக விளக்கம் கூறுகிறேன். கவனமாக

                        கேளுங்கள்

தேஜாஸ்ரீ :             சரி, ஐயா..... கூறுங்கள்.

தமிழாசிரியர் :         மாணவர்கள் கொக்கைப் போல இருக்க வேண்டும்.

                        என்று ஏன் கூறினேன் தெரியுமா? கொக்கு தனக்கான இரை

வரும் வரை ஒற்றைக்காலில் நின்றுக் கொண்டு இருக்கும்.

தனக்கான இரை வந்ததும் கொத்தி உண்ணும். அதுப் போல மாணவர்கள் தனக்கான வாய்ப்பு வரும் வரை அமைதியாக இருக்க வேண்டும். வாய்ப்பு வந்ததும் அதை மிகச்சரியாகப் பயன்படுத்த வேண்டும்.

இளவரசி :           சரி ஐயா….. இனிமேல் நாங்கள் அவசர பட மாட்டோம். எங்களுக்கான வாய்ப்பு வரும் போது அதை சரியாகப் பயன்படுத்துவோம்.

தமிழாசிரியர் :       கோழியைப் போல இருக்க வேண்டும் என்று

                             சொன்னது....  கோழி குப்பையைக் கிளறி கிளறித் தனக்கான    

                               உணவினை மட்டும் உட்கொள்ளும். அது  போல சமூகத்தில் 

                              நல்லது , கெட்டது  இருந்தாலும், நல்லதை மட்டுமே எடுத்துக்     

                             கொள்ள  வேண்டும். இன்று கைபேசியில் நல்லதும் உண்டு; தீமையும்

                             உண்டு. அவற்றை அறிந்து நன்மை மட்டும் நாம் எடுத்துக்

                             கொள்ள வேண்டும்.

தேஜாஸ்ரீ     :         ஆமாம் ஐயா, இனி மேல்  நாங்கள் நல்லதை மட்டுமே எடுத்துக்

                              கொண்டு எங்கள் பண்பினை வளர்த்துக் கொள்வோம்.

கைபேசியைக் கூட படிக்கும் காலம் வரை தொட மாட்டோம். கைபேசியால் எங்களுக்கு தீமை தான்.

தமிழாசிரியர் :         மூன்றாவதாக உப்பைப் போல இருக்க வேண்டும். எனக் கூறியது.......

உணவில் உப்பின் சுவையை நாக்கு உணர்வதை போல , ஒவ்வொருவரின் வெளித்தோற்றத்தைக் காணாது அவரின்  குணநலன்களை ஆராய்ந்து உணர்ந்து பழக வேண்டும்.

கவிபிரியா :          ஆம் ஐயா…. நீங்கள் கூறுவது சரி தான். ஒருவரின் பண்பு தான்

                              அவரை அடையாளப்படுத்தும்.

மாணவிகள் :          ஐயா, அருமை. மிக சரியாக விளக்கினீர்கள். இனி நாங்கள்    

                              இவ்வாறே நடந்து கொள்வோம். நன்றி ஐயா.

 CLICK HERE

Top of Form

Post a Comment

THANKS FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post