10TH-TAMIL-NEW EDTION BOOK -25-26-UNIT-5-TOPPERS - BIG QUESTION

 

பத்தாம் வகுப்பு

தமிழ்

இயல் – 5

மீத்திற மாணவர்களுக்கான நெடுவினாக்கள்

நெடுவினாக்கள்

1. போராட்டக் கலைஞர் – பேச்சுக் கலைஞர் – நாடகக் கலைஞர் – திரைக் கலைஞர் – இயற்றமிழ்க் கலைஞர்  ஆகிய தலைப்புகளைக் கொண்டு கட்டுரை எழுதுக.

குறிப்புச் சட்டம்

முன்னுரை

போராட்டக் கலைஞர்

பேச்சுக் கலைஞர்

நாடகக் கலைஞர்

திரைக் கலைஞர்

இயற்றமிழ்க் கலைஞர்

முடிவுரை

பன்முகக் கலைஞர்

முன்னுரை :

        அரசியல், கலை, எழுத்து, கவிதைகள், வசனங்கள், பேச்சு, என பலத்துறைகளிலும் வித்தகர் ஒருவர் உண்டென்றால் அவர் கலைஞர் ஒருவரே. கலைஞரின் பன்முக ஆற்றலை நாம் இக்கட்டுரையில் காண்போம்.

போராட்டக் கலைஞர் :

                        “ இனப்பற்றுக்காண் தமிழ்ச்சிங்கக் கூட்டம்

                          கிழித்தெறிய தேடுதுவண் பகைக் கூட்டத்தை “

          என்று பாவேந்தர் பாட்டுக்கு இலக்கணமாய் திகழ்ந்தவர் கலைஞர். தமிழ்க் கொடியைக் கையில் ஏந்தி சிறு வயதிலேயே இந்தி திணிப்பு போராட்டத்தினை நடத்தியவர்.1946 இல் கருப்புக் கொடியேந்தி இந்தி எதிர்ப்பு ஊர்வலத்தை நடத்தினார். பள்ளியில் படித்த போது “ பனகல் அரசரின் சாதனைகள் “ என்னும் துணைப்பாட நூல் அவருக்கு அரசியல் அரிச்சுவடியாக இருந்தது. அவரின் போராட்டப் பண்பே அவருக்குள் இருந்த கலைத் தன்மையை வளர்த்தது.

பேச்சுக் கலைஞர்

                           கேட்டார்ப் பிணிக்கும் தகையவாய்க் கேளாரும்
                               வேட்ப மொழிவதாம் சொல்”

        என்னும் வள்ளுவரின் குறளுக்கு இணங்க தன்னுடைய பேச்சாற்றலில் சொல்வன்மை மிக்கவர் கலைஞர். இளமைப் பருவத்தில் பெரியாரின் பகுத்தறிவு சிந்தனைக் கருத்துகளால் ஈர்க்கப்பட்டார். பட்டுக்கோட்டை அழகிரி, அறிஞர் அண்ணா அவர்களின் பேச்சாற்றல் கவர்ந்தது.  கிராமத்து இளைஞராக இருந்தும் மேடைப் பேச்சில் பெருவிருப்பம் கொண்டார். தன்னுடைய சக மாணவர்களுக்கும் பேச்சுப் பயிற்சி அளிப்பதற்காகச் “ சிறுவர் சீர்திருத்தச் சங்கம் “ என்பதையும், மாணவரிடையே ஒற்றுமையை வளர்த்தெடுக்க “ தமிழ்நாடு மாணவர் மன்றம் “ என்னும் அமைப்பையும் ஏற்படுத்தினார்.

நாடகக் கலைஞர்:

        உணர்ச்சியைத் தூண்டிவிட்டு, உள்ளத்தில் புதைந்து கிடக்கும் அன்பையும், அறிவையும், தூய்மையையும் வெளிப்படுத்தி மக்களைப் பண்படுத்தும் மகத்தான கலை நாடகக் கலை” – அவ்வை. தி.க.சண்முகம்

        நாடகங்களில் தான் சொல்ல விரும்பும் ஆழமான கருத்துக்களை எளிதில் பொது மக்களை கவரும் மேடையில் அமைப்பதில்  வித்தகர் கலைஞர்.  கலைஞர், முதன்முதலில் எழுதி அரங்கேற்றிய நாடகம், ‘பழநியப்பன்’. 1944-ம் ஆண்டு அரங்கேற்றப்பட்டது.தூக்குமேடை’, ‘பரப்பிரம்மம்’, ‘சிலப்பதிகாரம்’, ‘மணிமகுடம்’, ‘ஒரே ரத்தம்’, ‘காகிதப்பூ’, ‘நானே அறிவாளி’, ‘வெள்ளிக்கிழமை’, ‘உதயசூரியன்’, ‘திருவாளர் தேசியம்பிள்ளை’, ‘அனார்கலி’, ‘சாம்ராட் அசோகன்’, ‘சேரன் செங்குட்டுவன்’,‘நாடகக் காப்பியம்’, ‘பரதாயணம்’  உட்பட 21 நாடகங்களை எழுதியுள்ளார் கலைஞர்.

திரைக் கலைஞர்:

           திரைத்துறையில் கதாசிரியராகவும்வசனகர்த்தாவாகவும்பாடலாசிரியராகவும் மற்றும் தயாரிப்பாளராகவும் சிறந்து விளங்கியவர் கலைஞர் கருணாநிதி. 1947-ம் ஆண்டு வெளியான ‘ராஜகுமாரி’ திரைப்படம்தான்கலைஞர் முதன் முதலில் வசனம் எழுதிய திரைப்படம். 1952-ல்கலைஞர் கதைவசனம் எழுதி வெளியான ‘பராசக்தி’ திரைப்படம்தமிழ்த் திரையுலக வரலாற்றில் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியது.

கலைஞர் கதை வசனம் எழுதிய திரைப்படங்களை

பகுத்தறிவு பேசுபவை – (பராசக்தி, ராஜகுமாரி, மலைக்கள்ளன்)

அரசியல் பேசுபவை – (புதுமைப்பித்தன், குறவஞ்சி, அரசிளங்குமரி, வண்டிக்காரன் மகன்)

சமூக முன்னேற்றம் பற்றி பேசுபவை – (மருதநாட்டு இளவரசி, பணம், நாம், திரும்பிப் பார்)

பெண்ணுரிமை பற்றி – (மணமகள், ராஜா ராணி, இருவர் உள்ளம், பாசப்பறவைகள்)

இலக்கியம் பற்றிப் பேசுபவை – (அபிமன்யு, பூம்புகார், உளியின் ஓசை)
என வகைப்படுத்தலாம்.

இயற்றமிழ்க் கலைஞர்:

          இயல்பாகப் பேசப்படுவதும் எழுதப்படுவதுமாகிய தமிழை இயல் என்கிறோம். இந்திய தேசிய இராணுவ வீரர் மலேசிய மண்ணில் ஆங்கிலேயரால் தூக்கிலிடப்படுவதை எதிர்த்து “கயிற்றில் தொங்கிய கணபதி” என்ற நூலை தனது 22 வயதில் எழுதினார். அனைவரும் புரிந்துகொள்ளும் வகையில் எளிய நடையில், ‘குறளோவியம்’ என்ற தலைப்பில், திருக்குறளுக்கு கலைஞர் எழுதியுள்ள விளக்க உரை, கலைஞர் அவர்களின் முதன்மையான இலக்கியப் பங்களிப்பாகும். திருக்குறளுக்கு உரை எழுதிய பலரும் பெண்ணடிமைத் தனத்தோடு பொருள் விளக்கம் கூறியுள்ள நிலையில், பெண்களை உயர்வாகக் கூறி உரை எழுதியவர் கலைஞர் மட்டுமே. 178 நூல்களை கலைஞர் எழுதியிருக்கிறார்.

முடிவுரை :

        கலைஞர் கடைசியாக வசனம் எழுதிய தொடர், கலைஞர் தொலைக்காட்சியில் வெளியான ‘ஸ்ரீ ராமானுஜர்’ ஆகும். ‘ஸ்ரீ ராமானுஜர்’ தொலைக்காட்சித் தொடருக்காக, தனது 92-வது வயதில் வசனம் எழுதினார். கலைஞர். பல்வேறுத் துறைகளில் வெற்றிக் கண்டு பல்துறை வித்தகராக விளங்கியவர் கலைஞர்.

2. சந்தக் கவிதையில் சிறக்கும் கம்பன் என்ற தலைப்பில் இலக்கிய உரை எழுதுக.

   அன்பும் பண்பும் குணச்சித்திரமும் கொண்ட தலைவர் அவர்களே! தேர்ந்தெடுத்த பூக்களைப் போன்று வரிசை தொடுத்து அமர்ந்திருக்கும் ஆன்றோர்களே! அறிஞர் பெருமக்களே! வணக்கம், இயற்கை கொலு வீற்றிருக்கும் காட்சியைப் பெரிய கலைநிகழ்வே நடப்பதான தோற்றமாகக் கம்பன் காட்டும் கவி..... தண்டலை மயில்கள் ஆட.......  இவ்வுரையைத் தொடர்க.

அன்பும் பண்பும் குணச்சித்திரமும் கொண்ட தலைவர் அவர்களே! தேர்ந்தெடுத்த பூக்களைப் போன்று வரிசை தொடுத்து அமர்ந்திருக்கும் ஆன்றோர்களே! அறிஞர் பெருமக்களே! வணக்கம்,

இயற்கை கொலு வீற்றிருக்கும் காட்சியைப் பெரிய கலைநிகழ்வே நடப்பதான தோற்றமாகக் கம்பன் காட்டும் கவியில்...

தண்டலை மயில்கள் ஆட தாமரை விளக்கந் தாங்க,

கொண்டல்கள் முழவினேங்க குவளைக் கண் விழித்து நோக்க

தெண்டிரை யெழினி காட்ட தேம்பிழி மகரயாழின்

வண்டுகளி னிதுபாட மருதம்வீற்றி ருக்குமாதோ

  என சோலையில் மயில்கள் அழகுற நடனமாட, தாமரை மலர்கள் விளக்குகள் ஏற்றியது போல இருக்க, மேகங்கள் நடனத்திற்கு மத்தளங்கள் கொட்ட, இவற்றை குவளை மலர்கள் விழித்து நோக்குகின்றன. அலைகள் திரை சீலைகளாய் விரிய, வண்டுகளின் ரீங்காரம் மகர யாழினை மீட்பது போல உள்ளன என இயற்கையின் காட்சியினை பெரிய கலைநிகழ்வே நடப்பது போல சந்த நயத்தோடு கம்பன் பாடியுள்ளார்.

 மேலும் ஒன்றின் இருப்பால் இன்னொன்று அடையாளப்படுத்தப்படுகிறது என்பதனை கம்பன்,

வண்மையில்லை யோர்வறுமை யின்மையால்

திண்மையில்லை நேர்செறுந ரின்மையால்எனப் பாடியுள்ளார்.

நாட்டில் வறுமை இல்லாததால் கொடைக்கு இடம் இல்லை, நேருக்கு நேர் போர் புரிபவர் இல்லாததால் உடல் வலிமையை காட்ட வாய்ப்பில்லை என்பது போல கோசல நாட்டின் பெருமையை சந்த நயத்தோடு பாடலில் வெளிப்படுத்தியுள்ளார்.

இராமனின் மாநிற மேனியை வருணிக்கும் கம்பன்,

மையோ? மரகதமோ? மறிகடலோ? மழைமுகிலோ?

ஐயோ இவன் வடிவென்பது ஓர் அழியா அழகுடையான்

மை, மரகதம், கடல், என்றெல்லாம் உவமை சொல்லி, நிறைவாக சொல்ல இயலவில்லை என்பதனை ‘ஐயோ’ என்ற சொல்லைக் கொண்டு சந்த நயத்தோடு பாடி இருப்பது சிறப்பானது.

ஆழ நெடுந்திரை ஆறுகடந்து இவர் போவாரோ

வேழநெடும் படை கண்டு விலங்கிடும் வில்லாளோ “

இராமனின் நண்பன் குகனின் வருத்தத்தைக் கூட சந்த இன்பத்தோடு பாடி இருப்பது மகிழ்ச்சியூட்டுகிறது. ‘ ஓசை தரும் இன்பம் உவமையிலா இன்பமடா’ என பாரதி சொல்வதை இந்த பாடல் வரிகள் உணர்த்துகிறது.

உறங்குகின்ற கும்பகன்ன! உங்கள் மாய வாழ்வெ லாம்

இறங்குகின்றது! இன்று காண்; எழுந்திராய்! எழுந்திராய்

கறங்கு போல வில்பிடித்த கால தூதர் கையிலே

உறங்குவாய், உறங்குவாய்! இனி கிடந்து உறங்குவாய்

உறங்குகின்ற கும்பகருணனைக் கூட உலக்கையால் மாறி மாறி இடிக்கும் ஒத்த ஓசையில் அமைந்த சந்த நயமிக்க பாடல் மூலம் எழுப்பி கால தூதர் கையில் உறங்கச் சொல்லி இருக்கிறார் கம்பர்.

இவ்வாறாக கோசல நாட்டின் இயற்கை வளங்களைப் போற்றவும், நாட்டின் பெருமையைக் கூறவும், இராமனின் மேனியை வருணிக்கவும், நண்பனின் துயரைக் கூறவும், கும்பகருணன் வாழ்வு இறங்குவதையும் அழகான சொற்களை அமைத்து பாடுவதற்கேற்ற இனிய சந்த நயத்தோடு பாடல்களை எழுதியிருப்பதில் கம்பருக்கு நிகர் கம்பர் மட்டுமே.

3.பாய்ச்சல் கதையின் மையக் கருத்தைக் குறிப்பிட்டுக் கதையைச் சுருக்கி எழுதுக.

பாய்ச்சல்

குறிப்புச்சட்டம்

முன்னுரை

அனுமார்

அனுமாரி நெருப்பாட்டம்

அழகுவின் உதவி

அழகுவின் ஆட்டம்

அனுமார் மகிழ்ச்சி

முடிவுரை

முன்னுரை:

                            ஊருக்காக ஆடும் கலைஞன் தன்னை மறப்பான்

                             தன் கண்ணீரை மூடிக்கொண்டு இன்பம் கொடுப்பான்”

              ஒரு கலைஞன் மற்ற கலைஞர்களிடம் இருந்து வேறுபட்டு, தனக்கெனத் தனித்தன்மைகளைக் காட்டுவான். கலை ஈடுபாட்டில் அவனுக்கு  வயதோ, உடற்சோர்வோ பாதிப்பை ஏற்படுத்துவதில்லை. தன் கலையைப் பின்பற்ற தகுந்த வாரிசு  உருவாகின்ற போது அவன் கொள்கின்ற மகிழ்ச்சி அளப்பரியது. அவ்வாறு நிகழ்ந்த ஒரு கதையை இங்கு காண்போம்.

அனுமார்:

                                  போர்க்களம் நீ புகும்போது

                                  முள் தைப்பது கால் அறியாது”

              நாதசுரமும், மேளமும் ஒன்றாக இணைந்து ஒலித்தன. சத்தம் கேட்ட அழகு குனிந்து பார்த்தான். இரண்டு கால்களும்  மின்னல் வெட்டி மறைவது போலத் துள்ளிப் பாய்ந்து சென்றன. அந்தக் கால்கள் மனிதனிடம் இருந்து மாறுபட்டு, பச்சையா? நீலமா? என்று தீர்மானிக்க முடியாத நிறத்தில் இருப்பதைக் கண்டான். ஆளுயர குரங்கு ஒன்று மரத்தின் மேலிருந்து  இறங்குவதைக் கண்டான்.

அனுமாரின் நெருப்பாட்டம்:

                                    தீப்பிடித்தது அனுமாரின் வாலில் மட்டுமன்று

                                     அழகுவின் அளவுகடந்த ஆர்வத்திலும் தான்”

        திடீரென்று மேளமும்,நாதசுரமும்  வேகமாக ஒலிக்கத் தொடங்கின.எதற்கென்றே தெரியாமல்  ஒரு கூட்டம் திகைத்து பந்தலையே நோக்கிக் கொண்டிருந்தது. பெருங்குரல் எழுப்பியபடி அனுமார் பந்தல் கால் வழியாகக் கீழே குதித்தார்.அனுமார் வாலில் பெரிய தீப்பந்தம்  புகை விட்டு எரிந்து கொண்டிருந்தது.

அழகுவின் உதவி:

      சிறிது நேரம் கழித்து தீ எரிவது மெல்ல மெல்லத் தணிந்தது.. கீழே புரண்ட வாலை  இவனைப் போன்ற இரண்டு பேர் தூக்கி வந்தார்கள். அழகு அவர்கள் அருகில் சென்றான். அவர்கள் அந்த வாலை அழகுவிடம் ஒப்படைத்து விட்டுச் சென்றனர். அனுமார் சென்ற இடத்திற்கெல்லாம் அழகு வாலைத் தூக்கிக் கொண்டு சென்றான்.சற்று நேரம் கழித்து ஆட்டம் முடிந்தது.

அழகுவின் ஆட்டம்:

                                          பெயரில் மட்டும் அழகில்லை

                                           அவன் விரும்பிய கலையிலும் தான் அழகு”

      அனுமார் கழற்றி வைத்திருந்த துணி, சலங்கை, முகத்திற்குப் போடப்படுபவை ஆகியவற்றைத் தான் அணிந்து கொண்டு அனுமார்  போல ஆடினான் அழகு. களைப்பில் இருந்த அனுமார் பார்த்தார்.அழகு உடனே ஆட்டத்தை நிறுத்திக் கொண்டான். ஆனால் அனுமார்  தூணில்  சாய்ந்து கொண்டுபரவாயில்லை கட்டிக்கிட்டு என்றார்”. அவனும் நன்றாக  ஆடினான்.

அனுமார் அடைந்த மகிழ்ச்சி:

          அனுமார் அழகுக்கு ஆட்டத்தை சொல்லிக்கொடுத்தார். அவனும் அதே போல ஆடினான். அனுமார் தன்னை மீறிய மகிழ்ச்சியோடு,” பேஷ் பேஷ் உடனே பிடிச்சுகிட்டியே”  என்றார்.அனுமார் அம்பு போல அவன் முன் பாய்ந்தார். அழகு அனுமாரின் கை இடுக்கில் புகுந்து வெளியே சென்றான். பாய்ந்த வேகத்தில் கீழே விழப் போன அனுமார் தரையில் கையூன்றி சமாளித்து நின்று, வெறுமை நிறைந்த மனதோடு இவனைத் திரும்பிப் பார்த்தார்.

முடிவுரை:

  என்னலே, எனக்கே பாச்சா காட்டுற? பிடியில் சிக்காமல் நழுவுற என்று கூறிக் கொண்டு இருக்கும்போது அனுமாரின் கால்கள் பின்னிக்  கொண்டன. அழகு அனுமார் விழுந்ததைக் கவனிக்காமல்  தன் ஆட்டத்தில் மூழ்கியவனாக, உற்சாகம் பொங்க வேகமாக ஆட்டிக்கொண்டிருந்தான்.

CLICK HERE

Top of Form

Post a Comment

THANKS FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post